தினமும் 50,000 பாட்டில் கிருமி நாசினி உற்பத்தி ஆளப்புழா
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் பகுதியாக கேரள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் முகக் கவசம் தயாரிக்கும் பிரிவை உடனடியாக துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 50 ஆயிரம் பாட்டில் கைகழுவும் கிருமி நாசினிகளும், (சானிட்டைசர்) இதர மருந்து உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் கேரளா ஸ்டேட் ட்ரக்ஸ் அன்ட் பார்மசூட்டிக்கல் (கேஎஸ்டிபி) நிறுவனம். இது ஆளப்புழா மாவட்டம் கலவூரில் அமைந்துள்ளது. இங்கு, கோவிட் நோயாளிகளை பாதிக்கும் காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கான பாரசிட்டமோல், அமோக்சிலின், அசித்ரோமைசின், ஸெட்றாசின், இருமலுக்கான ஏழுவகையான மருந்துகளின் உற்பத்தி போர்க்கால அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு இதற்கான உத்தரவை ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கும். புதனன்று நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டம் கேஎஸ்டிபி-யின் நடப்பு மூலதனமாக ரூ.25 கோடி வழங்க அனுமதி அளித்தது. இந்த பணம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுவிட்டதாக நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
கைகழுவும் கிருமி நாசினியான சானிடைசர் கடந்த வாரம் வரை தினமும் 20 ஆயிரம் பாட்டில்களாக இருந்தது. இது தற்போது 50 ஆயிரம் பாட்டில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பாட்டில்களாக உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆல்கஹால் திருவிதாங்கூர் சுகர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மற்ற பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை சானிட்டைசர் பிரிவுக்கு மாற்றி இந்த உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. ஆனால் மருந்துகளின் உற்பத்தியை அதிகரித்த உடன் இந்த தொழிலாளர்கள் அவரவர் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர். மாற்றாக அருகில் உள்ள பகுதிகளிலிருந்து 180 தற்காலிக தொழிலாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய தானியங்கி நிரப்பும் இயந்திரம் உடனடியாக வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர் சி.பி.சந்திரபாபு தெரிவித்தார்.
முகக் கவசம்
டபிள்யு.எச்.ஓ தரத்தில் முகக் கவசங்கள் தயாரி்ப்பதற்கான ஒப்பந்தம் கேஎஸ்டிபி-க்கு கிடைத்துள்ளது. அவற்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், இதற்கான தனிச்சிறப்பு வாய்ந்த சல்லடைத்துணி கிடைக்காததால் உற்பத்தியை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஸ்க் தயாரிப்பதற்கான அயல்பணிக்கு கும்பஸ்ரீயையும், குளங்கரா யேசுபவனையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனம் முடக்கம்
தொழிற்சாலைக்கான சரக்கு வரத்து லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ளது. வேதிப்பொருட்கள் கொண்டுவந்த இரண்டு லாரிகள் நகர முடியாமல் சிக்கியுள்ளன. கேரளத்துக்கு வர ஓட்டுநர்கள் தயங்குவதே அதற்கு காரணம். அதோடு 2 லட்சம் லிட்டர் ஆல்கஹால் கோலார் சோதனை சாவடியிலும் மகாராஷ்ட்டிர எல்லையிலும் மூன்று நாட்களாக சிக்கியுள்ளன.
படம் கேஇ ட்ரக்ஸ்